புதன், 11 பிப்ரவரி, 2015

ஸ்மார்ட் போன் கேமராவில் தெளிவான போட்டோ எடுக்க


Posted By Muthukumar,ON Feb 11,2015
கேமராவில், லென்ஸை முன் பின் இழுத்து, போகஸ் செய்து, போட்டோக்களை எடுத்த காலம் ஒன்று இருந்தது. பின்னர், டி.எஸ்.எல்.ஆர். கேமராக்கள் அறிமுகமாகி, போட்டோ வல்லுநர்களின் பிரச்னையைப் பெரிதும் தீர்த்தன. 

இப்போது நாம் அனைவருமே எப்போதும் கேமராவுடன் தான் செல்கிறோம். ஆம், யாருடைய மொபைல் போனில், கேமரா வசதி இல்லாமல் உள்ளது? இருப்பினும், ஸ்மார்ட் போனில் கிடைக்கும் கேமராக்கள் தான், தரம் உயர்ந்ததாக, நல்ல படங்களை எடுக்கக் கூடிய வாய்ப்புகளைத் தருவதாக அமைந்துள்ளன. அதனை எப்படிப் பயன்படுத்தி, சிறந்த தரம் வாய்ந்த படங்களை எடுக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.


1. போகஸ் (Focus):: 

படங்கள் தெளிவாகத் தெரிய, கேமராவில் உருவம் குவியச் செய்வதனை இது கூறுகிறது. படம் ஒன்று எடுக்கப்படும் முன், திரையைப் பார்த்து, அது சரியாக போகஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

நீங்கள் படம் எடுக்கும் நபர் அல்லது பொருள் சரியான போகஸ் நிலையில் இல்லை என்றால், உங்கள் ஸ்மார்ட் போனை, முன் பின்னாக அட்ஜஸ்ட் செய்திடவும். அல்லது நீங்கள் முன், பின்னாகச் செல்ல வேண்டியதிருக்கும்.


2. இன்னொரு வழியும் போகஸ் செய்திட ஸ்மார்ட் போனில் உண்டு. பொருளில் எந்த இடத்தைப் போகஸ் செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, கேமராவின் திரையில், அந்த இடத்தில் தொடவும். 

ஸ்மார்ட் போனின் கேமரா, நீங்கள் தொட்ட இடத்தை மையமாகக் கொண்டு, போகஸ் செய்திடும். இத்தனையும் சரி செய்த பின்னர், ஸ்மார்ட் போனில், கிளிக் செய்திட வேண்டிய இடத்தைத் தொடவும்.


3. ஸூம் தவிர்க்கவும்: 

பல ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமராவில், ஸூம் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், டிஜிட்டல் ஸூம் செய்வது நல்ல படத்தைத் தராது. இங்கு தான், ஸ்மார்ட் போனின் கேமராவிற்கும் மற்ற கேமராக்களுக்கும் உள்ள வேறுபாட்டினை நீங்கள் உணரலாம். 

மற்ற கேமராவில் ஸூம் செய்திடுகையில், கேமராவின் லென்ஸ் முன் பின்னாக நகர்ந்து நிற்கும். ஆனால், ஸ்மார்ட் போனில் லென்ஸ் நகராது. தற்போது வந்திருக்கும் சில ஸ்மார்ட் போன்களில், திரையை இரு விரல்களால் கிள்ளி இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். 

ஆனால், இதனைச் செய்யக் கூடாது. ஏனென்றால், லென்ஸ் நகரப் போவது இல்லை. இந்த கிள்ளும் வசதி, படத்தின் அளவைக் குறைக்க, அதிகரிக்க மேற்கொள்ளலாம். ஸூம் செய்திட அல்ல. 

படம் எடுத்த பின்னர், நாம் படத்தின் அளவைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். எனவே, ஸ்மார்ட் போனில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம்.


4. ப்ளாஷ் வேண்டாம்: 

முன்பு பயன்படுத்தப்பட்ட, பொருட்கள் அல்லது ஆட்களைப் பார்த்து குறி வைத்து எடுக்கப்பட்ட கேமராக்களில், ப்ளாஷ் பயன்படுத்த வேண்டாம் என்பது சரியே. சுற்றுப் புறச் சூழல் வெளிச்சத்தைப் படம் எடுக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

நாம் ப்ளாஷ் கொண்டு என்ன செய்கிறோம் என நாம் அறிந்து கொள்ளவில்லை என்றால், ப்ளாஷ் பயன்படுத்துவது சரி அல்ல. ஒரு பொருள் சற்று வெளிச்சம் குறைவான இடத்தில் இருந்தால், அதனைத் தெளிவாகக் காட்டுவதற்கு ப்ளாஷ் உபயோகிக்கப்படுகிறது. 

ஆனால், அது சரியான வழி அல்ல. குற்றம் நடந்த இடத்தில், அங்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும், துல்லியமாகப் படம் எடுக்க திட்டமிட்டால், ப்ளாஷ் பயன்படுத்தலாம். 

சாதாரணமாக என்றால், இயற்கை வெளிச்சத்தினைப் பயன்படுத்துவதே நல்லது. கேமராவில் உள்ள ப்ளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, எடுக்கப்படும் பொருளுக்கு ஒளி தருவதைக் காட்டிலும், சுற்றிலும் உள்ள இயற்கை வெளிச்சத்திற்கு ஆட்களைக் கொண்டு செல்லவும். 

அல்லது, ஆள், பொருள் இருக்கும் இடத்திற்கு விளக்கு ஒளியைத் தரவும். எனவே, மிக அவசியம் என்றால் ஒழிய, கேமராவில் உள்ள ப்ளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்த வேண்டாம்.


5. பின்புறக் கேமராவைப் பயன்படுத்துக: 

ஸ்மார்ட் போன் அனைத்திலும், இப்போது முன்புறமாகவும், பின்புறமாகவும் என இரண்டு கேமராக்கள் தரப்படுகின்றன. இதில் பின்புறமாகத் தரப்படும் கேமராவே, அதிகக் கூடுதல் திறன் கொண்டதாகத் தரப்படுகிறது. 

எனவே, போட்டோ எடுக்க இதனையே பயன்படுத்த வேண்டும். முன்புறமாக உள்ள கேமராவினைப் பயன்படுத்தக் கூடாது. தானாக எடுக்கப்படும் செல்பி போட்டோ ஷூட் செய்திட வேறு வழியில்லை. 

முன்புறமாக உள்ள கேமராவினையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், நம் நண்பர் யாரையாவது நம்மைப் போட்டோ எடுக்கச் சொல்லலாம்.


6. கேமரா அப்ளிகேஷன்கள்: 

அண்மையில் வெளியான கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், கேமரா அப்ளிகேஷன் தரப்படுகிறது. தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை போனில் உள்ள அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படுகின்றன.